புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை மாநில அந்தஸ்து
தத்துவத் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும் என்றும், புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதான் என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தெரிவித்துள்ளார்..
புதுச்சேரி கதிர்காமம் மற்றும் நெல்லித்தோப்பு திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி மற்றும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் திமுகவினர் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டம் உதவிகளை வழங்கினர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.
கூட்டத்தில் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி.,
உலகத்திற்கே வழிகாட்டியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். மக்களை சந்தித்து அவர்களின் கனவு என்ன என்று கேளு என்பார்.
அப்படிப்பட்ட தத்துவத் தலைவர் ஸ்டாலின் ஆட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்க்பட்டுள்ளது. தமிழர்கள் என்பதால் புறக்கணிக்கப்பட்டு உள்ளோம்.
இந்த இரட்டை என்ஜின் ஆட்சியில் எந்த திட்டமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதுதான்.
பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் தருவதாகக்கூறி 15 பைசாக்கூட தரவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக்கூறி தரவில்லை. தற்போது புதுச்சேரி வரும் பிதரமர் பல்வேறு திட்டங்களை அறிவிப்பார். ஆனால் செயல்படுத்த மாட்டார்.
புதுச்சேரி மக்களை ஏமாற்ற முடியாது. இலவசங்களுக்கு மயங்காத புதுச்சேரி மக்கள் வரும் தேர்தலில் தெளிவாக முடிவு எடுப்பார்கள். புதுச்சேரியில் புதிய தொழிற்சாலை ஒன்றைக்கூட இந்த அரசு கொண்டுவரவில்லை. ஓடிய மில்லை சாத்திய பெருமை இந்த இரட்டை என்ஜின் அரசுக்கு உண்டு. புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கருப்பாடுகள் உள்ளன. அதுபற்றி முதல்வர் பேச பயப்படுகிறார். ஏன் என்றால் அவருக்கு ஜிரம் வந்தால்கூட டெல்லியில் இருந்து தான் மருந்து வரவேண்டும் என்ற நிலை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு 10 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளது. ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளது. புதுச்சேரியில் அதுபோல் ஏதாவது சொல்ல முடியுமா? இந்த நிலை மாற புதுச்சேரிக்கு மாநில தகுதி வேண்டும். மொழிக்காக தன்னுயிர் நீத்த இயக்கம் திமுக. அதனால் தான் மாநில தகுதி பெற முடியும் என்றார்.


