பச்சையம்மன் ஆலய ஜீரணத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்….
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரத்தில் உலக பிரசித்தி பெற்ற பர்வத மலை உள்ளது.

இந்த மலையின் உச்சியில் அருள்மிகு ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த பர்வத மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பச்சையம்மன் உடனாகிய ஏழு முனீஸ்வர ஸ்வாமிகள் ஆலய நூதன கோபுர புனராவர்த்தன, ஜீர்ணோர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை கணபதி ஓமம் முதலாம் கால யாக பூஜைகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து ஆலய கோபுரம் விமானங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோபுரத்தின் மீது ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் செய்து தத்வார்ச்சனை நாடி சந்தனம், தாவிய ஓமம், மகா பூர்ணஷூதி உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் செய்து கடம் புறப்பட்டு ஆலய உச்சியில் அமைந்துள்ள விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் அதிமுக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமஜெயம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் அனைவரும் 4560 உயரம் உள்ள பர்வத மலை நோக்கி செல்வதால் பர்வத மலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.


