பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலாக விளங்குவது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலாகும். இக்கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் இன்று அதிகாலை நடைபெற்றது. நேற்று மாலை கிரிவீதியில் இருந்த மரத்தில் இருந்து திரிசூலம் வடிவிலான கம்பம் வெட்டி எடுக்கப்பட்டு ஊர்வலமாக படிப்பாறை காளியம்மன் கோயில் கொண்டு வரப்பட்டது.
பின்னர் வையாபுரிக் கண்மாய் அரமசரத்து விநாயகர் கோயிலில் வைத்து திருக்கம்பம் அலங்கரித்தல் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நான்கு ரதவீதியை வலம் வர செய்யப்பட்டு இன்று அதிகாலை மாரியம்மன் கோயில் முன்பு சாட்டப்பட்டது.
இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மிப்பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரிசூல வடிவிலான கம்பத்துக்கு பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபட துவங்கினர்.
வரும் பிப்17 ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தலும், இரவு அருள்மிகு மாரியம்மனுக்கு பிப்24 திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான மாசித் தேரோட்டம் வரும் பிப்25ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


