15-ந்தேதி கல்லணையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என தஞ்சையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
தஞ்சை மாவட்டத்தில் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் கருணாநிதி சிலை திறப்பு, அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமையும் இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிலை அமையும் இடத்திற்கான மாதிரி வரைபடத்தை பார்த்தனர்.
சிலையை சுற்றிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர் தொடர்ந்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சைக்கு வருகிற 15 – 16 இரண்டு நாட்கள் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் 15ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு மதியம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கல்லணை வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். என தெரிவித்தார்.
முதலமைச்சர் ஒருவர் கல்லணையை திறப்பதே இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


