சிதம்பரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மாரத்தான் ஓட்டம்
இன்று உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சிதம்பரம் கோயில் நகர ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மாரத்தான் ஓட்டம் நடந்தது.

மருத்துவக் கல்லூரி வாயிலின் முன்பு நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ்பாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அங்கு துவங்கிய மாரத்தான் ஓட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், யோகா கல்வி மையம், பேரூராட்சி அலுவலகம், மருத்துவக் கல்லூரி நூலகம் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது.
சுமார் 3.8 கிலோ மீட்டர் தூரம் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று ஓடினர்.பின்னர் மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


