சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில், கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 15ம் தேதி நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது, இந்த நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், பாம்பன் ரயில் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவுப்பகுதியில், கடல் பகுதியில் மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெடிகுண்டு தடுப்பு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு பாலம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர். மேலும்; பாம்பன் ரயில் பாலத்தில் பொதுமக்கள், மீனவர்கள் வருகை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

பாம்பன் சாலை பாலம், ரயில் நிலையம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம், அக்னிதீர்த்த கடற்கரை போன்ற இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


