செஞ்சி அருகே, வறுமையும், மதுப் பழக்கத்தாலும் சாலையோர வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட குடும்பம் ஒன்று- உதவியை ஏங்கிக் காத்திருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 90 வயதான பார்வையற்ற ஏழுமலை மற்றும் அவரது 80 வயது மனைவி ஏகபத்தினி ஆகியோர் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் ஒரே மகன் சம்பத்குமார், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தைப் பராமரிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால், அவரது மனைவி விஜயகுமாரி, குடும்பத் தகராறு காரணமாக தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், இரண்டு பேரக்குழந்தைகள்—11-ஆம் வகுப்பு படிக்கும் மாதேஷ் மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் ரித்திகா -தாத்தா பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
குடும்பத்துக்கு நிலையான வருமானம் இல்லாத நிலையில்,மூதாட்டி ஏகபத்தினி கூலி வேலை செய்து பார்வையற்ற தன் கணவரையும்,பேரக்குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்.
எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், சாலையோரத்தில் ஓட்டை கூரை குடிசையில் இக்குடும்பம் தங்கியுள்ளது.

மழைக்காலங்களில் குடிசை முழுவதும் தண்ணீர் புகும் நிலையில், தார்பாய் போட்டு உயிர் காக்கும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்தமாக வீடு கட்ட இடம் இல்லாததால், அரசு வீட்டுமனை பட்டா வழங்கவும், வீடு கட்ட உதவி செய்யவும் பலமுறை அதிகாரிகள் -மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 10-ஆம் வகுப்பு, பொதுத் தேர்வு 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதி வரவும் இந்த மாணவர்கள் மெழுகுவத்தி வெளிச்சத்தில் படித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசும் மாணவி ரித்திகா, எங்கள் அண்ணன் 10. ஆம் வகுப்பில் 450- நல்ல மதிப்பெண் எடுத்தும் மேல்படிப்பு செல்ல முடியாத நிலை. நானும் படிக்க ஆசை. ஆனால் வறுமை தடையாக உள்ளது.
அரசு எங்களுக்கு இடமும் வீடும் வழங்கினால், நாங்களும் நல்ல நிலைக்கு வர முடியும், தமிழக முதலமைச்சர் கனவு காணுங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறுகிறார் நாங்களும் இந்த குடிசை வீட்டில் தினந்தோறும் இரவு கனவு காண்கின்றோம் எதுவும் நிறைவேறவில்லை என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், தமிழகத்தில் பல திறமையான மாணவர்கள் வறுமையால் கல்வியைத் தொடர முடியாத சூழல் நிலவுகிறது.
இக்குடும்பத்திற்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உடனடி உதவி வழங்குமா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது…
இந்த குடும்பத்தின் கனவுகள் நனவாகுமா…? மாவட்ட நிர்வாகத்தின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த சாலையோர வாழ்க்கை.


