விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், மாசி மகத் தேர்விழா
விருத்தாசலம், அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், மாசி மகப் பெருவிழாவின் 9ஆம் நாள் தேர்விழா . ஏராளமான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து இறைவனின் பேரருளை பெற்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், காசியை விட வீசம் அதிகம் என்று பழங்காலம் தொட்டு போற்றப்பட்டு வரும் பழமை வாய்ந்த அருள்மிகு விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் மாசி மகப் பெருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இவ்வருட மாசி மகப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நாள்தோறும் உட்பிரகாரத்திலுள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று,சுவாமி வீதி உலாநடைபெற்று வந்த நிலையில், இன்று 9 ஆம் நாள் திருத்தேர்விழா நடைபெற்றது.

முன்னதாக, உற்சவ மூர்த்தி களுக்கும் பெரிய நாயகி உடனுறை பழமலைநாதர்க்கும்,மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அருள்மிகு விநாயகர், அருள்மிகு விருத்தாம்பிகை – பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர்,அருள்மிகு வள்ளி தெய்வானை முருகர், அருள்மிகு சண்டிகேஸ்வரர், உற்சவ மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, திருத்தேர்களில் எழுந்தருளிக்கப்பட்டு மேளவாத்தியம், மங்கள வாத்தியம் சிவவாக்கியங்கள் முழங்க, விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்து இறைவனின் பேரருளை பெற்றனர்.


