தஞ்சாவூர் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனை
தஞ்சாவூர் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட உதவி கலெக்டர் பயிற்சி கார்த்திக் ராஜா தொடக்கி வைத்தார்
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.
இதன் மூலம் நெசவாளர்கள் தொடர்ந்து வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த சிறப்பான பணியை கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.
தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட உதவி ஆட்சியர்(பயிற்சி) கார்த்திக்ராஜா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாக வரவழைக்கப்பட்டு உள்ளன.

தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024ல் ரூ.1 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2025க்கு ரூ. 2 கோடியே 30 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு
திட்டம்” என்ற சேமிப்பு திட்ட த்தினை செயல்படுத்தி வருகிறது.
வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப ரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.


