உடல் உறுப்புகளை அதிவிரைவாக உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான டிரோன்
உடல் உறுப்புகளை அதிவிரைவாக உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான குறைந்த எடையுடைய பெட்டியுடன் கூடிய டிரோன் சாதனத்தை அறிமுகம் செய்தது தனியார் பல்கலைக்கழகம்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 9 சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த தயாரிப்புகளைத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் முன்னிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி இயக்கக இயக்குநர் நிதி பன்சால் அறிமுகம் செய்தார்.
இதில், தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை அதிவிரைவாக உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான குறைந்த எடையுடைய டிரோன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் சாலை வழியாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதை மிக விரைவாக தொடர்புடைய மருத்துவமனைக்கு அனுப்பி, நோயாளிக்கு உரிய நேரத்துக்குள் கிடைக்கும் விதமாக டிரோன் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த டிரோனில் தட்பவெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக்கூடிய 3 டி பிரிண்டட் வசதியுடைய பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஜிபிஎஸ் சாதனமும் இணைக்கப்பட்டுள்ளதால், உடல் உறுப்புகளுடன் கூடிய இந்த டிரோன் பெட்டி எங்கு பறக்கிறது? என்பதை அறிந்து கொள்ளலாம்.
டிரோனில் தற்போதுள்ள பெட்டிகளின் எடை 20 கிலோ உள்ள நிலையில், இப்பெட்டி உடல் உறுப்புகளுடன் சேர்த்து 5 கிலோ எடையில்தான் உள்ளது. டிரோன் எடை குறைவாக இருந்தால், பேட்டரி பயன்பாடு நீடித்து, அது செல்லக்கூடிய தொலைவு அதிகமாக இருக்கும்.
இந்த டிரோன் ஒரு கிலோ மீட்டரை 2 நிமிடங்களில் கடந்துவிடும். அதிகபட்சமாக 20 கி.மீ. வரை செல்லும். முதல் முதலாக ஐந்து கிலோ எடைக்கு உள்பட்ட டிரோன் பெட்டி இப்பல்கலைக்கழகம்தான் கண்டுபிடித்து, அறிமுகம் செய்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், பசுக்களுக்கு பசி ஏற்படுத்தி, அதிகமாக உணவுகளை எடுத்துக் கொண்டு, கூடுதலாக பால் சுரக்கும் விதமான மூலிகை மருந்து, கல்வி பயன்பாட்டுக்கான நடமாடும் ரோபோ, நரம்பியல் பரிசோதனைக்கான பேஸ் பி என்கிற மென்பொருள், ஆறு அடுக்கு பாதுகாப்புடன் கூடிய பயோ மெட்ரிக் பாதுகாப்பு பெட்டகம், மனித ஆற்றலை பயன்படுத்த முடியாத இடங்களில் ஆயிரம் கிலோ எடை வரையிலான பொருள்களைச் சுமந்து செல்லக்கூடிய தானியங்கி ரோபோ இயந்திரம், டைமர், ரிமோட் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மோட்டார் கண்ட்ரோலர் உள்பட 9 சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூடுதல் இயக்குநர் சிவக்குமார், கமாண்டர் ஜெயகிருஷ்ண நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.